கிள்ளான், மார்ச் 26 – சிலாங்கூர், கிள்ளானிலுள்ள, பேரங்காடிக்கு சென்றிருந்த பெண் ஒருவர் பதற்றமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.
அப்பெண்ணின் 19 மாதக் குழந்தையை இரு ஆடவர்கள் கடத்த முயன்றதே அதற்கு காரணம் ஆகும்.
நேற்றிரவு மணி 7.30 வாக்கில், சம்பந்தப்பட்ட பெண் அவரது சகோதரியுடன் பேரங்காடியின் மின் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்ததை, வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் எஸ்.விஜய ராவ் உறுதிப்படுத்தினார்.
அங்கு வந்த இரு அந்நிய நாட்டு ஆடவர்கள், அப்பெண் கையில் பிடித்திருந்த அவரது 18 மாத குழந்தையை தூக்கி கொண்டு ஓட முயன்றனர்.
எனினும், குழந்தையை பிடித்து இழுத்து காப்பாற்றிய அப்பெண் கூச்சலிட்டதை அடுத்து, தப்பி ஓட முயன்ற அவ்விரு ஆடவர்களும் அங்கிருந்த பொதுமக்களின் உதவியோடு கையும் களவுமாக பிடிப்பட்டனர்.
போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவ்விருவரும் விசாரணைக்காக மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, விஜய ராவ் சொன்னார்.
முன்னதாக, டி-சட்டையும், அரைக்கால் கால்சட்டையும் அணிந்திருக்கும் இரு ஆடவர்கள், பேரங்காடி ஒன்றின் மின்படிக்கட்டுகளுக்கு அருகில் வளைத்து பிடிக்கப்படும் காணொளி ஒன்று முகநூலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.