
110 ஆண்டுகள் பந்திங் அருள்மிகு மகா மாரியம்மன் தேவஸ்தான திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம்
பந்திங், பிப்ரவரி-9
பந்திங் தாய்க்கோவில் என்றழைக்கப்படும் 110 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பந்திங் அருள்மிகு மகா மாரியம்மன் தேவஸ்தான திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
1990 ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகத்திற்கு பிறகு புதிய ஆலயத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடதப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 10 லட்சம் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்ட இந்த புதிய ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகமாக இது அமைகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இம்முறை ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி, துர்கையம்மன் ஆகிய இரு தெய்வ சன்னிதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு நிரந்தரமாக புதிய யாகசாலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தின் சிறப்பு அம்சமாக ஆலயத்தின் கோபுரங்கள் உட்பட ஆலயத்தின் மேற்பகுதி முழுவதும் விலையுயர்ந்த தங்க நிற சாயம் பூசப்பட்டுள்ளது. இதன் மூலம் கோலாலங்காட் வட்டாரத்தில் விலையுயர்ந்த தங்க நிற சாயம் பூசப்பட்டுள்ள ஒரே ஆலயம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெறுகிறது.
தமிழகத்திலிருந்து வருகை புரிந்த நான்கு வேத விற்பன்னர்களுடன் இணைந்து உள்ளூரைச் சேர்ந்த இருபது பேர்கள் கொண்ட அர்ச்சகர் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு பிரமுகராக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, உட்பட மேலும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை தொடங்கி அடுத்து வரும் 48 நாட்களுக்கு மண்டாலபிஷேகம் நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



