
சுங்கை பூலோ, மே-14 – சிலாங்கூர் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு சற்றே தொலைவில் மெல்வுட் அரேனாவுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், சேவல் சண்டை மற்றும் சட்டவிரோத லாட்டரி நடவடிக்கையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைதாகினர்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் தடுப்புப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
சுமார் 8 மாதங்களாக அக்கும்பல் அங்கு அந்நடவடிக்கையிர் ஈடுபட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் முதல் ட்ரோன் வழியாக உட்பட மேற்கொண்ட கண்காணிப்பின் பலனாக, அக்கும்பல் முறியடிக்கப்பட்டதாக, புக்கிட் அமான் CID துணை இயக்குநர் டத்தோ ஃபாடில் மார்சூஸ் கூறினார்.
48 மலேசியர்கள் உட்பட மொத்தம் 124 பேர் கைதாகினார்; எஞ்சிய 78 பேர் இந்தோனேசியர்கள், அவர்களில் நால்வர் பெண்கள்.
52 உயிருள்ள சேவல்கள், 7 செத்துப் போன சேவல்கள், சேவல் சண்டைக்கான 17 உலோகக் கொக்கிகள், ஒரு எடை அளவுகோல் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
145,855 ரிங்கிட் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.
இது தவிர சூதாட்ட மற்றும் சட்டவிரோத லாட்டரி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன