
மலாக்கா, மே-3 – மலாக்கா, தாமான் பாச்சாங் உத்தாமாவில் உள்ள ஸ்பா மையத்தில் வாடிக்கையாளர் போல் நுழைந்த 16 வயது பையன், அங்கிருந்த ஊழியரைக் கொள்ளையிட்டு கற்பழிக்கவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏப்ரல் 30-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில், அந்த ஸ்பா மையத்திற்கு வந்த சந்தேக நபர், வரவேற்பாளரான பெண்ணிடம் தனது தோழிக்காக சிகிச்சைக் கட்டணங்கள் குறித்து விசாரித்திருக்கிறான்.
தோழி வந்துகொண்டிருப்பதாகவும் அவன் சொன்னான்.
கேட்ட தகவல்கள் கிடைத்ததும், ஸ்பா உள்ளே நுழைந்தவன் திடீரென அப்பெண்ணின் வாயை தன் கையால் மூடி, சிகிச்சை அறையினுள் பிடித்து இழுத்தான்.
அப்பெண்ணின் கையை இறுக பிடித்துகொண்டு பணம் கேட்டு மிரட்டியவன், பின்னர் தரையில் தள்ளி கற்பழிக்க முயன்றான்.
அப்போது அவனுடன் மல்லுக்கட்டிய அப்பெண், சட்டென அவன் நாக்கைக் கடித்து விட்டார்.
அதோடு உதவிக் கோரி அவர் கத்திக் கூச்சலிட, அப்பையன் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
இதையடுத்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார்.
விசாரணையில் இறங்கிய மலாக்கா தெங்கா போலீஸ், வியாழக்கிழமை நள்ளிரவில் தாமான் மெர்டேக்கா தெங்காவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அவனைக் கைதுச் செய்தது.
விசாரணைக்காக அவன் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.