
புது டெல்லி, பிப்ரவரி-5-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா வருகிறார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பின் பேரில் நடைபெறும் இப்பயணம், 2024-ல் இரு நாடுகளும் உறவை ‘முழுமையான வியூக பங்காளித்துவத்திற்கு’ உயர்த்தியதற்கு பிந்தைய முதல் சந்திப்பாகும்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
வருகையின் ஒரு பகுதியாக மலேசிய இந்திய வம்சாவளியினருடன் மோடி உரையாற்றுவார் என, இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கையில் கூறிற்று.
அதேபோல் தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
இந்தியா- மலேசியா CEO மன்ற நிகழ்ச்சியும் அட்டவணையில் உள்ளது.
மோடியின் இந்த பயணம், இந்தியாவின் ‘கிழக்கு நோக்கும் கொள்கை’யை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்திருந்த மோடி, இந்த வருகையின் போது ஏதாவதொரு தமிழ்ப் பள்ளிக்கு சிறப்பு வருகை மேற்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதை மறுக்க முடியாது.



