கோலாலம்பூர் , அக் 17 – 2020 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை நாள்தோறும் இரண்டு சிறார்கள் காணாமல் போனதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் ( Saifuddin Nasution Ismail ) உறுதிப்படுத்தினார். 2020 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம்வரை 3,847 சிறார்கள் காணமாமல் போனதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளதோடு அவர்கள் 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் என அவர் கூறினார். அவர்களில் 96 விழுக்காடு சிறார்களை கண்டுப்பிடிப்பதில் போலீசார் வெற்றி பெற்றனர்.
2020 ஆம் ஆண்டில் 792 சிறார்களும், 2021ஆம் ஆண்டு 594 சிறார்களும், 2022 ஆம் ஆண்டில் 902 பேரும், 2023 ஆம் ஆண்டில் 779 பேரும் இவ்வாண்டு செப்டம்பர்வரை 780 பேரும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இதன் வழி ஒரு ஆண்டுக்கு சராசரி 770 சிறார்கள் அல்லது இருவர் காணாமல் போகின்றனர். காணாமல்போகும் சிறார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை தடுப்பதற்கு உள்துறை அமைச்சு எத்தகைய நடவடிக்கையை எடுத்து வருகிறது என பாரிட் பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மி மாட் தாய்ப் ( Ismi Mat Taib) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது சைபுடின் இத்தகவலை வெளியிட்டார்.