
பாயான் லெப்பாஸ், ஏப்ரல்-18, 2027-ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய நிலையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் smartboard எனப்படும் விவேகப் பலகைகளைத் தருவிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நவீன கற்பித்தல் முறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, இந்த விவேகப் பலகை கற்றல் (Smart Board Education) அறிமுகம் செய்யப்படும்.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் அதனைத் தெரிவித்தார்.
அனைத்து மட்டங்களிலும் இந்த விவேகப் பலகைப் பயன்பாடு மேம்படுத்தப்படுவதை காண விரும்புவதாக அவர் சொன்னார்.
பினாங்கிலுள்ள பள்ளிகளுக்கு 50 செட் விவேகப் பலகைகளை இன்று எடுத்து வழங்கிய போது ஃபாட்லீனா அவ்வாறு கூறினார்.
விவேகப் பலகைகள் என்பது டிஜிட்டல் காட்சிப் பெட்டிகள் ஆகும்; ஆசிரியர்களும் மாணவர்களும் தொடுதல், stylus பேனாக்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தில் ஈடுபட அவை உதவுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், பாடங்களைக் காட்சி வடிவிலும், காணொலி வாயிலாகவும் கற்பித்து, கற்றலை மேலும் எளிமையாக்குகின்றன.
இந்த உயர் தொழில்நுட்ப பலகைகள், பாரம்பரிய கரும்பலகைகளின் செயல்பாட்டை நவீன கணினி ஆற்றலுடன் இணைத்து, நிகழ்நேர ஒத்துழைப்பு, பல்லூடக ஒருங்கிணைப்பு மற்றும் மாறும் கற்றல் அனுபவங்களை செயல்படுத்துகின்றன.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த விவேகப் பலகைகளின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்காக, அமைச்சு மற்ற மாநிலங்களில் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருவதாக ஃபாட்லீனா கூறினார்.
என்றாலும், பள்ளிகளில் விவேகப் பலகைகளை கொண்டு வருவதானது, அர்ப்பணிப்பு, முயற்சி, மக்கள்தொகை மற்றும் பயன்பாட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல அம்சங்களைப் பொறுத்தது என்பதை அவர் ஒப்புக் கொண்டார்