
சூரிச், செப்டம்பர் 25 –
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் பங்கேற்கும் குழுக்களின் எண்ணிக்கை 48 ஆக விரிவடையவிருக்கும் நிலையில் , 2030 ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் 100 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 64 நாடுகளுக்கு இன்னும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு பிஃபா எனப்படும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் பரிசீலித்து வருகிறது.
இந்த ஆலோசனைக்கு கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், பிஃபா தலைவர்கள் நியூயார்க்கில், உருகுவே மற்றும் பராகுவே நாட்டுத் தலைவர்களையும், தென் அமெரிக்கா காற்பந்து சம்மேளனமான கான்மெபோலின் தலைவர்களையும், அர்ஜென்டினாவின் காற்பந்து சங்கத்தின் தலைவரையும் சந்தித்தனர்.
ஒற்றுமை, படைப்பாற்றல் மற்றும் பெரிய நம்பிக்கைக்கு நாங்கள் அழைப்பு விடுக்க விரும்புகிறோம் என்று கான்மெபோல் தலைவர் அலெஜான்ட்ரோ டொமிங்குஸ் ( Alejandro Dominguez ) சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
காற்பந்து விளையாட்டு அனைவராலும் பகிரப்படும்போது, கொண்டாட்டம் உண்மையிலேயே உலகாளவிய நிலையில் இருக்கும் என Alejandro Dominguez சுட்டிக்காட்டினார். 64 குழுக்கள் பங்கேற்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் உருகுவே காற்பந்து சங்கம் முதலில் பரிந்துரை செய்தது.