
கோலாலம்பூர், பிப்ரவரி-18-2027 கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர இதுவரை 26,000-க்கும் மேற்பட்ட 6 வயது குழந்தைகள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களோடு, 2020-ல் பிறந்த 165,000 7 வயது குழந்தைகளும் முதல் 3 நாட்களில் பதிவுச் செய்துள்ளனர்.
கல்வித் தலைமை இயக்குநர் Azam Ahmad அதனைத் தெரிவித்தார்.
முன்கூட்டியே முதலாமாண்டில் நுழைய தங்கள் குழந்தைகள் தயாராக உள்ளனர் என்று நம்பும் பெற்றோர், ஆனால் இன்னும் பதியாமல் இருப்போர், ஏப்ரல் 1 முதல் நவம்பர் 15 வரை manual முறையில் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
குழந்தையின் தயார்நிலை குறித்து சந்தேகம் இருந்தால், பள்ளி அல்லது மாவட்டக் கல்வி அலுவலகத்திடம் பெற்றோர்கள் ஆலோசனைப் பெறலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
2027 கல்வியாண்டில் முதல் வகுப்புக்கான மாணவர் பதிவைப் பெற்றோர்கள் மார்ச் 31 வரை https://idme.moe.gov.my என்ற முகவரியில் மேற்கொள்ள முடியும்.
அடுத்தாண்டு முதல், விருப்ப அடிப்படையில் பாலர் கல்வி 5 வயதிலும் முதல் வகுப்பு 6 வயதிலும் தொடங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதிகமான மாணவர் சேர்க்கையைச் சமாளிக்க, கல்வி அமைச்சு 20,000 ஆசிரியர்களை நியமித்து, புதிய வகுப்புகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.



