
கோலாலம்பூர், மே-4- Ti-Ratana சமூக நல சங்கம் தனது 30-ஆம் நிறைவாண்டை நேற்று விமரிசையாகக் கொண்டாடியது.
செராஸில் உள்ள பிரபல உல்லாசத் தலத்தில் ‘இதயங்களை ஒளிரச் செய்தல், வாழ்க்கையை மாற்றுதல்’ என்ற கருப்பொருளில் இரவு விருந்தோடு அந்நிகழ்வு நடைபெற்றது.
நன்கொடையாளர்கள், பயனாளிகள், வர்த்தகப் பிரமுகர்கள் என 2,000 பேர் பங்கேற்ற அவ்விருந்தில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சிறப்பு பிரமுகராகக் கலந்துகொண்டார்.
அவர் தமதுரையில் “30 ஆண்டுகளாக Ti-Ratana சமூக உதவிகளை மட்டும் செய்து வரவில்லை; மாறாக கண்ணியத்தையும் தூண்டுகிறது; இன்று இரக்கத்தை உறுதியான மாற்றமாக மாற்ற நாம் உறுதி எடுப்போம்” என்றார்.
கலாச்சார நடனங்கள், இசை நிகழ்ச்சி, K-pop fusion நடனம் என Ti-Ratana குழந்தைகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
30-ஆம் நிறைவாண்டின் அடையாளமாக Ti-Ratana நிறுவனர் டத்தோ Dr. கே. ஸ்ரீ தம்மரத்தனா, தலைவர் டத்தோ ஸ்ரீ Dr. KK Chai தலைமையில் கேக் வெட்டப்பட்டது.
Ti-Ratana காப்பகங்களில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், தனித்து வாழும் தாய்மார்கள் உள்ளிட்ட 500 பேருக்குப் பயனளிக்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு நன்கொடைத் திரட்டவும் இவ்விருந்து நிகழ்ச்சி பயன்பட்டது.
கடந்தாண்டு 1,500 பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில் இவ்வாண்டு 2,000 பேர் வந்திருந்தது Ti-Ratana-வின் சமூக நலக் காரியங்களுக்கு அதிகரித்து வரும் ஆதரவைப் புலப்படுத்தியது.
பேறு குறைந்தவர்களுக்கான தங்களது சமூக உதவிகளை விரிவுப்படுத்துவதில், அடுத்தாண்டு மேலும் அதிகமான நன்கொடையாளர்களுடன் 31-ஆம் ஆண்டு விருந்து நிகழ்வை நடத்த அச்சங்கம் எண்ணியுள்ளது.