
சென்னை, மே-31 – “தவறு செய்தால் நானே மன்னிப்புக் கேட்பேன்; இல்லையென்றால் மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை” என பிரபல நடிகர் கமல ஹாசன் கூறியுள்ளார்.
‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி என தாம் பேசியது, கர்நாடகாவில் பெரும் சர்ச்சையாகியிருப்பது குறித்து கமல் அவ்வாறு கருத்துரைத்தார்.
கன்னட மொழியையும் கன்னடர்களையும் கமல ஹாசன் சிறுமைப்படுத்தி விட்டதாகவும், எனவே அவர் பகிரங்க மன்னிப்புப் கேட்ட வேண்டும் என்றும் கர்நாடகாவில் போராட்டம் வெடித்துள்ளது.
அவரின் போஸ்டர்களும் படத்தின் பேனர்களும் கிழிக்கப்பட்டு வருகின்றன.
மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் தடைச் செய்வோம் என, அம்மாநில திரைப்பட சம்மேளனமும் மிரட்டியுள்ளது.
கர்நாடகா முதல் அமைச்சர் சித்தராமையாவும் கமல ஹாசனுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கெல்லாம் நான் அடிபணியப் போவதில்லை; நான் பார்க்காத போராட்டங்களா அல்லது எதிர்ப்புகளா என சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
“நான் பேசியது அன்பினால்; கேரளா, கர்நாடகா, ஆந்திரா மீது நான் கொண்டுள்ளது உண்மையான அன்பு; அன்பு ஜெயிக்கும்” என்றார் அவர்.
மக்கள் அமைதியாகத் தான் இருக்கிறார்கள்; ஆனால் உள்நோக்கத்துடன் குறிப்பிட்ட சில தரப்புகள் பிரச்னையைக் கிளப்புகின்றனர். இது ஜனநாயக நாடு; நீதி வெல்லும் என தாம் நம்புவதாக, அரசியல்வாதியுமான கமல ஹாசன் சொன்னார்.
மணிரத்னம் இயக்கி கமல், STR, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ல் வெளியாகிறது.