
செர்டாங், பிப் 27 – அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 5,000 இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மாதிரிகளில் சுமார் 50 விழுக்காடு உள்ளூர் வெள்ளை அரிசியுடன் கலந்திருப்பதை மலேசிய விவசாய ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் Biotechnology மற்றும் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உள்நாடு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியை வேறுபடுத்தி அறியக்கூடிய deoxyribonucleic acid வரிசைமுறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக Mardi Biotechnology மற்றும் நானோ டெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சி அதிகாரி முகமட் ஷாரில் பிர்டவுஸ் ( Mohd Shahril Firdaus ) கூறினார்.
இந்த 5,000 மாதிரிகள் அதிகாரிகள் நடத்திய பல நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 55 அரிசி மூட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு அரிசி மூட்டையிலிருந்தும், 95 மாதிரிகள் எடுக்கப்பட்டன. மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள், 950 மாதிரிகளில் எங்களால் ஆய்வு நடத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு வெள்ளை அரிசியின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கான சிறப்புப் பணிக்குழுவை உருவாக்கிய போது, வெள்ளை அரிசி விநியோகிப்பை அடையாளம் காண்பதற்கு 2023 ஆம் ஆண்டின் இறுதி முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான கால அவகாசத்தை விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு நிர்ணயித்தது.
இந்த ஆய்வின் முடிவை நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறை ஆணையம் , உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சிற்கு சமர்ப்பித்துள்ளோம் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.