
கோலாலம்பூர், ஜூன் 5 – எட்டு அரசியலமைப்பு கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் தனது விண்ணப்பத்தை நிராகரித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேல்முறையீடு செய்துள்ளார். புத்ராஜெயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற பதிவகத்தில், மெசர்ஸ். ஜைன், மெகாட் & முராத் ( Zain , Megat & Murat ) வழக்கறிஞர் நிறுவனம் மூலம் தனது மேல்முறையீட்டை பி.கே,ஆர் தலைவருமான அன்வார் தாக்கல் செய்தார்.
அன்வாரின் வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கே ராஜா சேகரனை ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது, அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு உடனடியாக நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டதாக அவர் கூறினார். எட்டு அரசியலமைப்பு கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் தனது விண்ணப்பம் தனிப்பட்ட விலக்குரிமையைப் பெறவோ அல்லது சட்ட மறுஆய்வைத் தவிர்க்கவோ அல்ல என்று அன்வார் கூறினார். அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கும் நோக்கங்களுக்காக அல்லது நிறுவனங்களை சீர்குலைக்கும் வழக்குகளிலிருந்து மிக உயர்ந்த பொதுப் பதவி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான தேவையின் அடிப்படையிலும் இந்த விண்ணப்பம் உள்ளதாக அவர் கூறினார்.