
ஷா ஆலாம், அக்டோபர்-9 – ‘முதலைத் தலையைக்’ கொண்ட Alligator gar வகையைச் சேர்ந்த வெளிநாட்டு மீனை பொறுப்பற்ற தரப்பினர் பொது நீர் நிலையில் விட்டிருப்பதை, மலேசிய மீன்வளத் துறை கண்டறிந்துள்ளது.
கிள்ளான் ஆற்றில் 16.94 கிலோ எடையிலான அம்மீன், அண்மையில் பிடிபட்டு வைரலானதை அத்துறை சுட்டிக் காட்டியது.
இதற்கு முன் 2020-ஆம் ஆண்டில் சபாக் பெர்ணாம் கரையோரத்தில் இதே போன்ற மீன் இறந்துகிடந்ததையும் அது நினைவுப்படுத்தியது.
Alligator gar வகை மீன்கள் உள்ளூர் ஆற்று மீன்கள் அல்ல; அது கண்டிப்பாக அரிய விலங்குகளை வளர்ப்போரால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நம்மூர் ஆற்றில் விடப்பட்டிருக்க வேண்டும்.
உள்ளூர் ஆறுகளில் உள்ளூர் மீன்கள் மட்டுமே இருப்பதை உறுதிச்செய்வது நம் எல்லோரின் பொறுப்பு என, சிலாங்கூர் மீன்வளத் துறையின் இயக்குநர் Noraisyah Abu Bakar தெரிவித்தார்.
வாயில் சிக்குவதையெல்லாம் பதம் பார்க்கும் வகையைச் சேர்ந்த இந்த Alligator gar மீன்களை, அவற்றின் அசல் வாழ்விடமில்லாத இடங்களில் விட்டால் சுற்றுச் சூழல் சமநிலைக்குத் தான் பாதகம் ஏற்படும் என்றார் அவர்.
இதனால் உள்ளூர் மீன்கள் அழியவும் சாத்தியமிருப்பதாக அவர் சொன்னார்.
வட மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த இந்த Alligator gar மீன்களின் சராசரி அளவு, 2 முதல் 2.5 மீட்டர் நீளமாகும்.
எடையோ 90 முதல் 110 கிலோ வரை போக்கும்.