
ஓஸ்லோ, நவம்பர்-8 – நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற அனைத்துலகப் பூனைகள் கண்காட்சியில், ‘பேபி’ என்ற பெயரைக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த 9 வயது பூனை உலக வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
தனது அழகான தோற்றத்தால் மட்டுமின்றி, போட்டி நெடுகிலும் மிகவும் பவ்யமாகவும் நட்போடும் நடந்துகொண்டு, நீதிபதிகளின் மனங்களை பேபி கொள்ளைக் கொண்டது.
இந்த உலகப் பூனைகள் போட்டியில் பேபி பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும்.
2017-ஆம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய பேபி, இம்முறை Kelab Kuching Malaysia அமைப்பின் முயற்சியில் போட்டியில் பங்கெடுத்தது.
சாலையில் சுற்றித் திரிந்த ‘பேபி’ பூனையைக் கண்டெடுத்து, ஒரு குழந்தையைப் போல சீராட்டி வளர்த்த Shaharudin Shuib- Rooaida Mohd Darus தம்பதி, உலக அரங்கில் பேபியின் வெற்றியால் ஆனந்தமடைந்தனர்.
பேபி வென்ற உலகப் பட்டத்திற்கு உலகம் முழுவதுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளர்ப்புப் பூனைகள் போட்டிப் போட்டது குறிப்பிடத்தக்கது.