
கோலாலம்பூர், ஜன 21 – ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையே போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்த போதிலும் மலேசியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் 41 பாலஸ்தீன மக்கள் மற்றும் அர்களின் 86 வாரிசுதாரர்களையும் காஷாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. அண்மையில் அரச தந்திர குறிப்பு சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இது குறித்து தற்காப்பு அமைச்சின் பதிலுக்காக தங்களது தரப்பு காத்திருப்பதாக மலேசியாவுக்கான பாலஸ்தீன தூதர் வாலி அபு அலி ( Walid Abu Ali ) தெரிவித்தார். இது தொடர்பான இதர நடவடிக்கைக்காக விளக்கம் அளிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் பாலஸ்தீனர்கள் எப்போது தங்கள் தாயகத்திற்குத் திரும்ப முடியும் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
பாலஸ்தீனர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எகிப்து அதிகாரிகளுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு விவகாரங்களில் தூதரகம் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் தூதரக அதிகாரிகள் தீவிரமாக ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.
அவர்கள் வந்ததிலிருந்து, காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்குத் தேவையான ஆவணங்கள் தொடர்பான விவகாரங்களை நாங்கள் எளிதாக்கினோம். மேலும் அவர்களின் பராமரிப்பை உறுதிப்படுத்த உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டோம் என வாலிட் அபு அலி கூறினார்.