கூலாய், ஜன 22 – இல்லாத முதலீடுத் திட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் முதலீடு செய்த 150,000 ரிங்கிட்டை வயதான e-hailing ஓட்டுனர் ஒருவர் இழந்தார். சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்த முதலீடு தரகரிடம் அந்த ஆடவர் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து இந்த மோசடிக்கு உள்ளானார். இரண்டு வாரங்களில் 750,000 டாலர் வருமானத்தை திரும்ப பெறமுடியும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட செயலியை பதிவு செய்த பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதிக்கும் இம்மாதம் 20 ஆம் தேதிக்குமிடையே 12 வங்கிக் கணக்குகள் மூலமாக 22 முறை சம்பந்தப்பட்ட ஆடவர் இணையத்தில் பணப் பட்டுவாடா செய்துள்ள்ளார்.
தான் முதலீடு செய்த பணத்திற்கு 362,702 அமெரிக்க டாலர் கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்த பின்னர் அந்த தொகையை மீட்க முயன்றபோது அந்த பணத்திற்கான கணக்கு முடக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பெரும் அதிர்ச்சிச்கு உள்ளானார்.
இதனைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த வாடகை கார் ஓட்டுனர் இது குறித்து போலீசில் புகார் செய்ததால் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் டான் செங் லீ ( Tan Seng Lee ) தெரிவித்தார்.