
ஜோகூர் பாரு, மார்ச் 21 – ஜோகூரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலையில் 10,000 த்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
நேற்று இரவு 8 மணிவரை 917 குடும்பங்களைச் சேர்ந்த 3,964 பேர் வெளியேற்றப்பட்ட வேளையில் இன்று காலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்தது.
5 மாவட்டங்களில் உள்ள 98 வெள்ள நிவாரண மையங்களில் 3,018 குடும்பங்களைச் சேர்ந்த 10,763 பேர் தங்கியிருப்பதாக மாநில பேரிடர் நிர்வாக குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி ( Azmi Rohani ) தெரிவித்திருக்கிறார்.
ஜோகூர் பாரு மாவட்டம் வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தில் மட்டும் 1,138 குடும்பங்களைச் சேர்ந்த 4,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில அரசாங்க செயலாளருமான அஸ்மி கூறினார்.
வெள்ளத்தினால் இரண்டாவது நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக குளுவாங் திகழ்கிறது.
அங்கு 635 குடும்பங்களைச் சேர்ந்த 2,163 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
மேலும் கோத்தா திங்கி, Pontian மற்றும் கூலாயிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதனிடையே ஜோகூர் பாரு, குளுவாங், மெர்சிங், Pontian, கூலாய் மற்றும் கோத்தா திங்கியில் இன்றுவரை கடுமையாக மழை பெய்யும் என மலேசிய வானிலைத்துறையான MetMalaysia அறிவித்துள்ளது.