
ஷா அலாம், ஏப் 22 – பணம் செலுத்தியதற்கான சான்றாக தங்கள் வணிக வளாகத்தில் போலி ரசீதுகளைப் பயன்படுத்தி இரண்டு பேர் நடத்திய மோசடியில் சிக்கி, ஒரு உணவக உரிமையாளர் 300 ரிங்கிட்டிற்கும் அதிகமாக ஏமாந்தார்.
இதன் தொடர்பில் இன்று அதிகாலை மணி 2.50 அளவில் இரண்டு ஆடவர்கள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
இரண்டாவது முறையாக தாம் இவ்வாறு ஏமாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் புகார் செய்ததைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஷா அலாம் செக்சன் 13 இல் உள்ள உணவகத்தில் ஏப்ரல் 14 மற்றும் 20 ஆம் தேதிகளில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைதான 34 வயதுடைய ஆடவர் இதற்கு முன் மூன்று குற்றப் பின்னணிகளையும் 35 வயதுடைய மற்றொரு ஆடவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த இருவரையும் இம்மாதம் 24 ஆம் தேதிவரை நான்கு நாட்களுக்கு தடுத்துவைப்பதற்கு ஷா அலாம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் தண்டனைச் சட்டத்தின் 420 ஆவது விதியின்கீழ் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு மற்றும் 10 ஆண்டுகள் மேற்போகாதவரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்