Latestமலேசியா

சுங்கை பாக்காப் விபத்தில் சிக்கிய அண்ணன் தங்கைக்கு நன்கொடை; 200,000 ரிங்கிட் புதிய இலக்கு; சுந்தரராஜூ அறிவிப்பு

செபராங் பிறை, ஏப்ரல்-23,பினாங்கு, செபராங் பிறை, சுங்கை பாக்காப்பில் கோர விபத்தில் சிக்கிய இளம் அண்ணன் தங்கைக்கான நன்கொடை இலக்கு, 200,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ அதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 107,000 ரிங்கிட் நன்கொடை திரண்டுள்ளது; நல்லுள்ளத்தோடு அதற்கு நிதியுதவி வழங்கிய பொது மக்களின் ஆதரவு நெகிழ வைக்கிறது.

கிடைத்துள்ள இத்தொகையிலிருந்து, அக்குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு மாதா மாதம் 1,500 ரிங்கிட் வங்கிக் கணக்கில் போடப்படும்.

எனினும், அக்குடும்பத்தின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டால், நீண்ட கால அடிப்படையில் அத்தொகைப் போதாது.

எனவே, நன்கொடை முயற்சியைத் தொடங்கிய சுங்கைப் பாக்காப் தமிழ்ப் பள்ளி மற்றும் மாவட்ட கல்வி இலாகாவுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு, புதிய இலக்காக 200,000 ரிங்கிட்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏதுவாக நன்கொடைத் திரட்டல் தேதியும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ அறிவித்தார்.

வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் என்பதால், அக்குடும்பத்துக்கு 42,000 ரிங்கிட் விலையிலான மலிவு வீட்டையும் சுந்தரராஜூ ஒதுக்கியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்குத் தோழமையான எல்லா வசதிகளையும் அவ்வீடு கொண்டுள்ளது.

ஆக, ஜூன் 30-க்குப் பிறகு 200,000 ரிங்கிட் திரட்டப்பட்டால், அது அவ்விரு குழந்தைகளின் வங்கிக் கணக்குகளில் போடப்படும்.

அதுவே 300,000 ரிங்கிட் வரை கிடைத்தால், அதிலிருந்து 42,000 ரிங்கிட் அந்த வீட்டை வாங்க பயன்படுத்தப்படும்..

ஒருவேளை, 200,000 ரிங்கிட்டுக்கும் குறைவாகக் கிடைத்தாலும் பிரச்னையில்லை; தாமும், நண்பர்களும் சேர்ந்தாவது அந்த வீட்டை வாங்கிக் கொடுப்போம் என்றார் அவர்.

டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு முன்னதாக அவ்விருப் பிள்ளைகளையும் சென்று கண்டு நலம் விசாரித்தார்.

அவருடன், மாவட்ட கல்வி இலாகா இயக்குநர் மொஹமட் ரிசால் இஸ்மாயில், சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியை சந்திரவதினி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் சரவணன் உள்ளிட்டோரும் சென்றனர்.

பிப்ரவரி 18-ம் நாள் பாட்டியின் மோட்டார் சைக்கிளில் காலையில் பள்ளி செல்லும் வழியில் 7 வயது தர்ஷன் முருகனும், 5 வயது கவர்ஜிதா முருகனும் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

அவ்விரு குழந்தைகளுக்கும் நன்கொடை அளிக்க விரும்புவோர், SJKT SUNGAI BAKAP என்ற CIMB வங்கிக் கணக்கில், 8603583208 என்ற எண்களில், DARSHAN SJKT SUNGAI BAKAP எனக் குறிப்பிட்டு அவ்வாறு செய்யலாம்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!