
கோலாலம்பூர், ஏப்ரல்-26- உள்ளூர் பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலனின் திடீர் மறைவு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியை, உள்ளூர் கலைத்துறையினராலும் இரசிகர்களாலும் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று மதியம் நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து போலீஸ் சில முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
48 வயது சிவகுமார், 76 வயது அவரின் தாயாருடன் கோலாலம்பூர் ச்செராஸ், தாமான் டேசா பெட்டாலிங் அடுக்குமாடிக் குடியிருப்பில் இறந்துகிடந்தார்.
நண்பகல் 12.35 மணியளவில் இருவரும் 11-ஆவது மாடியிலியிருந்து குதித்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, ச்செராஸ் போலீஸ் தலைவர் துணை ஆணையர் அய்டில் போல்ஹசான் தெரிவித்தார்.
இருவரின் உடல்களும் சவப்பரிசோதனைக்காக ச்செராஸ் HCTM மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அம்மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இருப்பதாக இதுவரை ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
என்றாலும் மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறும் என அய்டில் சொன்னார்.
2006 ஆஸ்ட்ரோ பாடல் திறன் போட்டியின் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் சிவகுமார்.
தனது திறமையால் குறுகியக் காலக்கட்டத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவரான சிவகுமார், பழகுவதற்கும் மிகவும் இனிமையானவர்.
இதன் காரணமாகவே இரசிகர்களின் அபிமானத்தைப் பெற்று இவர் வலம் வந்தார்.
இந்நிலையில் இவரின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகுமாரின் இறுதிச் சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சிலாங்கூர் கிள்ளான், தாமான் ஸ்ரீ செந்தோசா ஜெயாவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் நடைபெறும்.
பிற்பகல் 2 மணிக்கு சிம்பாங் லீமா இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்படும்.