Latestமலேசியா

கோத்தா திங்கியில் கோர விபத்து; சிறுவன் பலி, 10 பேர் காயம்

கோத்தா திங்கி, மே-3 – ஜோகூர் கோத்தா திங்கியில் 3 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

நேற்றிரவு ஜாலான் ஜோகூர் பாரு – மெர்சிங் சாலையின் 44.2-ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த அவ்விபத்தில், மேலும் 10 பேர் காயமுற்றனர்.

பலியான சிறுவன், அவனது 47 வயது தாய் ஓட்டி வந்த புரோட்டோன் சாகா காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான்.

அவனுடன் 7 வயது முதல் 87 வயது வரையிலான மேலும் நால்வர் பயணித்தனர்.

பஹாங் ரொம்பினிலிருந்து கோத்தா திங்கி செல்லும் வழியில் அக்கார் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு எதிர் பாதைக்குள் நுழைந்தது.

அதில் தலையில் படுகாயமேற்பட்டு அச்சிறுவன் மரணமுற்றான்.

பெரோடுவா அல்சா காரில் வந்த 34 வயது ஓட்டுநர் மற்றும் 5 பயணிகளும், தொயோத்தா கொரோலா குரோஸ் காரை தனியாக ஓட்டி வந்த 33 வயது ஓட்டுநரும் காயமடைந்தனர்.

பலியான சிறுவனின் சடலம் சவப்பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

காயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!