
கோலாலாம்பூர், ஜூலை-31- வரும் அக்டோபரில் கோலாலாம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மலேசியா வருகிறார்.
இன்று காலை ட்ரம்புடன் தொலைப்பேசியில் பேசிய போது அவ்விவகாரம் உறுதியானதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
13-ஆவது மலேசியத் திட்டத்தை இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றிய போது அன்வார் அத்தகவலை வெளியிட்டார்.
ஆசியான் – அமெரிக்கா கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்கும் வாய்ப்பு இருப்பதை, இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கோடி காட்டியிருந்தார்.
தற்போது அவ்வருகை உறுதியாகியுள்ளது. இவ்வேளையில், மலேசியப் பொருட்களுக்கான புதிய வரி விகிதத்தை ட்ரம்ப் நாளை அறிவிக்கவுள்ளதாகவும் அன்வார் சொன்னார்.
கடவுள் கிருபையில், மலேசியப் பொருளாதரத்திற்கு சுமையைக் கொடுக்காத வண்ணம் அப்புதிய வரி விகிதம் இருக்குமென, பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1 முதல் மலேசியாவுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படுமென, முன்னதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அதை விட குறைவான வரி விகிதம் நாளை அறிவிக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பு இப்போது உருவாகியுள்ளது.