
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14- நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று தோட்டத் தொழிலாளர்கள் மகஜர் கொடுக்க வந்த போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பில் PSM எனப்படும் மலேசிய சோசலீஸ கட்சியின் தலைவர் அருட் செல்வன் மற்றும் அவரின் சகாக்கள், வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று டாங் வாங்கி போலீஸ் நிலையம் வந்திருந்தனர்.
விசாரணைக்கு வரவில்லை என்றால் போலீஸே வீடு தேடி வருமென தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார். தோட்டத்தொழில் சமூக ஆதரவுக் குழுவின் ஆலோசகருமான அருட்செல்வன், நேற்று அதன் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு நாடாளுமன்றம் சென்றார்.எனினும் அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவின் அருட்செல்வனே கீழே விழுந்தார்.
இந்நிலையில், அச்சம்பவத்தில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மகஜர் கொடுக்க வந்தவர்கள் போலீஸைத் தாக்கியதாகக் கூறப்படுவதை மறுத்தவர், அதற்கான வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் நிறைய இருப்பதாகக் கூறினார்.
இவ்வேளையில் தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட கால பிரச்னைகள் குறித்தும் அவர் விவரித்தார். நேற்றைய சலசலப்புக்குப் பிறகு ஒருவழியாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர் சபாநாயகரே அழைத்துப் பேசியதாகவும் அருள் வணக்கம் மலேசியாவிடம் கூறினார். இன்று PSM கட்சியினர், SUARAM, MANDIRI ஆகிய அமைப்புகளோடு தோட்டத் தொழில் ஆதரக் குழுவினரும் டாங் வாங்கி போலீஸ் நிலையம் வந்திருந்தனர்.