
ஜோகூர் பாரு, செப் 12 – ஜோகூர் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில் 100,000 லிட்டருக்கும் அதிகமான zam-zam புனித நீரையும், ஆயிரக்கணக்கான வேப் திரவங்களையும் கடத்தும் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.
சுங்க வரி உட்பட இதன் மொத்த மதிப்பு 3.42 மில்லியன் ரிங்கிட்டாகும்.
ஜோகூர் துறைமுக தீர்வையற்ற மண்டலத்தில் கொள்கலன் சோதனைகள் மற்றும் Gelang Patahவிலுள்ள சுல்தான் அபு பாக்கார் வளாகத்தில் லோரி முற்றுகைகள் ஆகியவற்றின் விளைவாக இந்த வெற்றி கிடைத்ததாக ஜோகூர் சுங்கத்துறை இயக்குநர் அமினுல் இஸ்மீர் முகமட் சோஹைமி ( Aminul Izmeer Mohd Sohaimi ) கூறினார்.
ஒரு முழுமையான சோதனையில், இறக்குமதி அனுமதி இல்லாமல் 107,910 லிட்டருக்கு இணையான 21,582 zam-zam நீர் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
zam-zam நீர் தடைசெய்யப்பட்ட பொருளாகும், சுங்க இறக்குமதி உரிமம் இருந்தால் மட்டுமே அதனை இறக்குமதி செய்ய முடியும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுங்க வரி உட்பட 2.58 மில்லியன் ரிங்கிட்டாகும் இதனிடையே மற்றொரு நடவடிக்கையில் 130,000 ரிங்கிட் மதிப்புள்ள Hino லோரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதோடு அதன் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7,680 யூனிட் மின்னணு சிகரெட் திரவமும் கண்டுப்பிடிக்கப்பட்டது.