
லங்காவி, நவம்பர்-20 – லங்காவி, Pantai Cenang கடலில் விஷத்தன்மைமிக்க ஜெல்லி மீன் கொட்டி 4 நாட்களாக உயிருக்குப் போராடிய 2 வயது ரஷ்யக் குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனையில் நேற்றிரவு 9.46 மணிக்கு அந்த ஆண் குழந்தையின் உயிர் பிரிந்தது.
மகன் Vladimir-ரின் பிரிவால் மனமுடைந்து போன 32 வயது தந்தை Nikita, அவன் மனஉறுதி மிக்கவன் என சோகத்துடன் கூறினார்; போராட்டம் நடத்தியே அவனது மூச்சு அடங்கியிருப்பதாகக் கூறி அவர் கண் கலங்கினார்.
மகனின் மரணத்தில் தாம் யாரையும் பழிச்சொல்ல விரும்பவில்லை எனக் கூறிய Nikita, சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணமும் இல்லை என்றார்.
ஆனால், ஜெல்லி மீன்கள் கொண்டு வரும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை இச்சம்பவம் ஏற்படுத்தட்டும் என அவர் சொன்னார்.
“எங்கள் மகன் என்றைக்குமே எங்களுக்கு ஹீரோ தான்” என Vladimir-ரின் 32 வயது தாய் Olga கூறினார்.
மகனை இங்கேயே தகனம் செய்து அவனது அஸ்தியை ரஷ்யா கொண்டுச் செல்ல அத்தம்பதி முடிவுச் செய்துள்ளது.



