
கோலாலம்பூர், பிப்ரவரி-28-ஊழியர் சேமநிதி வாரியமான EPF, 2025 நிதியாண்டுக்கான இலாப ஈவாக, சாதாரண சேமிப்புகளுக்கும் ஷாரியா சேமிப்புகளுக்கும் 6.15 விழுக்காட்டை அறிவித்துள்ளது.
இதற்கான மொத்த தொகை 79.6 பில்லியன் ரிங்கிட்டாகும்.
அதில் 67.1 பில்லியன் சாதாரண சேமிப்புகளுக்கும், 12.5 பில்லியன் ஷாரியா சேமிப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
EPF தலைவர் தான் ஸ்ரீ மொஹ்ட் சூகி அலி (Mohd Zuki Ali ) இன்று அறிக்கை வாயிலாக அதனை அறிவித்தார்.
கடந்தாண்டுக்கான இலாப ஈவு 6.2%-டிலிருந்து 6.5% வரை இருக்கலாமென பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், அதை விட குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“கடந்தாண்டு, எதிர்பாராத வர்த்தகக் கொள்கைகள் காரணமாக சந்தை நிலைமை சற்று சிக்கலாக இருந்தபோதிலும், EPF சிறப்பான செயல்திறனை காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என அவர் சொன்னார்.
“பங்குச் சந்தையின் நிலைத்தன்மை EPF வருமானத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதனை, நிலையான வருவாய் மற்றும் பல்துறை முதலீடுகள் ஆதரித்தன” என்றார் அவர்.
EPF ஃபின் முதலீட்டு சொத்துக்கள் RM1,409 பில்லியன் ஆக உயர்ந்திருப்பதையும், முந்தைய RM1,250 பில்லியனுடன் ஒப்பிடும்போது இது 12.8% வளர்ச்சி எட்டியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே, இந்த ஈவுத் தொகை முழுவதும் Akaun Fleksible எனப்படும் மூன்றாவது கணக்கில் போடப்பட வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை; அதுபற்றி எந்த அறிவிப்பும் வராததால், வழக்கம் போலவே மூன்று கணக்குகளிலும் அது பிரித்தே போடப்படுமென்பது உறுதியாகியுள்ளது.



