
சுங்கை பட்டாணி, மார்ச்-2 – ‘AIMST நமது தேர்வு’ பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக, கெடா சுங்கை பட்டாணியில் அமைந்துள்ள AIMST பல்கலைக்கழக வளாகத்துக்கு, பேராக் மாநில ம.இ.கா ஏற்பாட்டில் இலவச கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது.
பேராக் ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவரும் தேசிய உதவித் தலைவருமான தான் ஸ்ரீ எம். ராமசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த இலவச கல்விச் சுற்றுலாவில், 1,600-க்கும் மேற்பட்ட பேராக் மாநில மாணவர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
இந்த சுற்றுலா, மாணவர்களுக்கு AIMST பல்கலைக்கழகம் வழங்கும் உயர்கல்வி வாய்ப்புகள், டேப் கல்லூரியின் தொழில்நுட்பத் துறையில் தரமான கல்வி பயிற்சிகள், மற்றும் MIED கல்வி உதவிகளின் வாய்ப்புகளை அறிந்துகொள்ள அரிய வாய்ப்பாக அமைந்ததாக, தான் ஸ்ரீ ராமசாமி சொன்னார்.
AIMST பல்கலைக்கழகம், ஒரு சமுதாயக் கல்லூரி, மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றங்களை அடைய உதவி செய்யும் அதே நேரத்தில், சமூகத்தின் மேம்பாட்டிலும் ஈடுபடுவதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில் இந்த கல்விச் சுற்றுலா மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்திறன் குறித்த மேலதிகத் தகவல்களை கொடுத்துதவியதாக, AIMST துணை வேந்தர் Dr கதிரேசன் வி.சதாசிவம் தெரிவித்தார்.
பல்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வழங்கப்படும் படிப்புகள் குறித்தும் AIMST-ல் உள்ள வசதிகள் குறித்தும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கமளிப்பட்டது.
இந்த 1 நாள் இலவச கல்விச் சுற்றுலா மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக, பெற்றோர்கள் வணக்கம் மலேசியாவிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொண்டனர்.
ம.இ.காவின் கல்விக் கரமான மாஜு கல்வி மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் 2001-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த AIMST பல்கலைக்கழகம், தற்போது ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனை வேந்தராகக் கொண்டு துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.
மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் நாட்டில் தலைச்சிறந்து விளங்கும் தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றான AIMST, இந்திய மாணவர்களின் முதன்மைத் தேர்வாக இருக்க வேண்டுமென்பதை விக்னேஸ்வரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆக, இது போன்ற முயற்சிகள், அவ்விலக்கு நிறைவேற பெரிதும் உதவுமென நம்பப்படுகிறது.