Bloomberg-கை அல்ல, அசாம் பாக்கியின் பங்குடைமையை விசாரியுங்கள்; நூருல் இசா கோரிக்கை

கோலாலம்பூர், பிப்ரவரி-21,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி மீதான தனியார் நிறுவன பங்குடைமை குறித்த குற்றச்சாட்டுகளையே போலீஸார் விசாரிக்க வேண்டுமே தவிர, அதனை அம்பலப்படுத்திய Bloomberg செய்தி நிறுவனத்தை அல்ல!
பி.கே.ஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அதோடு, வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்ய நாடாளுமன்றத்திற்கு நேரடியாக அறிக்கை அளிக்கும் சுயேட்சை விசாரணைக் குழுவை அமைக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அசாம் பாக்கி முன்பு ஒரு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாக வெளியான தகவல்கள், அரசாங்க அதிகாரிகளுக்கான விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை அசாம் பாக்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்; அவதூறு பரப்பியதாகக் கூறி Bloomberg மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது; SOGO-வில் கடந்த வாரம் எதிர்ப்புப் பேரணியும் நடத்தப்பட்டது.
அதனை விசாரிக்க, அமைச்சரவை உத்தரவின் பேரில் தேசிய சட்டத் துறைத் தலைவர் தலைமையில் சிறப்புப் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், Bloomberg மீது புக்கிட் அமான் விசாரணை நடத்துவதாக அறிவித்த நிலையில், பிரதமரின் மகளுமான நூருல் இசா இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.



