கோலாலம்பூர், பிப்ரவரி-3 – ஊழியர் சேமநிதி வாரியமான EPF கணக்கில் தன்னார்வ முறையில் சந்தா பங்களிக்கும் திட்டத்திற்கு சந்தாத்தார்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
கடந்தாண்டு மட்டுமே 13 பில்லியன் ரிங்கிட் சந்தா, தன்னார்வ முறையில் செலுத்தப்பட்டுள்ளது.
EPF-பில் தங்களின் பணத்தைச் சேமித்து வைப்பதில் பொது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இது புலப்படுத்துவதாக, அதன் அதிகாரி ஒருவர் கூறினார்.
1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாத்தாரர்கள், வங்கிகளில் போடுவதை விட EPF-பில் பணத்தைச் சேமிப்பதையே விரும்பியுள்ளனர்.
கடந்த 20, 30 ஆண்டுகளாகவே உயரிய அதே சமயம் நிலையான இலாப ஈவுத் தொகையை EPF வழங்கி வருவதே அதற்குக் காரணம்.
அந்த 1.6 மில்லியன் பேரில் 1.2 மில்லியன் சந்தாத்தாரர்களும், மேலும் 400,000 பேர் i-Saraan திட்டத்தின் கீழும் பங்களிப்புச் செய்தவர்களும் ஆவர்.
இந்த i-Saraan திட்டமானது, சுயத் தொழில் செய்பவர்கள் மற்றும் நிலையான வருமானம் இல்லாத சாதாரணத் தொழிலாளர்கள், தன்னார்வ முறையில் சந்தா பங்களிப்புச் செய்வதாகும்.
i-Saraan திட்டத்தின் கீழ் பங்களிப்பாளர்கள் தங்களின் மொத்த தன்னார்வ பங்களிப்புகளுக்கு அரசாங்கத்திடமிருந்து 20 விழுக்காடு முதல் அதிகபட்சம் 500 ரிங்கிட் வரை சிறப்பு ஊக்கத்தொகையைப் பெறுவார்கள்.
அதே சமயம், தாங்களாக முன்வந்து பங்களிப்பைச் செய்யும் EPF உறுப்பினர்கள், ஆண்டுக்கு அதிகபட்சம் 100,000 ரிங்கிட் வரையில் தங்கள் கணக்குகளில் சேர்க்க முடியும்.
இவ்வேளையில், ஆபத்து அவசரத் தேவைகளுக்கு நினைத்த நேரத்தில் பணத்தை மீட்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாவது கணக்கான Flexible Account-டை, 70 விழுக்காட்டு EPF உறுப்பினர்கள் தொடாமலேயே உள்ளதும் தெரிய வந்துள்ளது.