
வாஷிங்டன், ஏப்ரல்-13-அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்தததை அடுத்து, Hormuz நீரிணையை உடனடியாக மறிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானுக்கு ‘சட்டவிரோதமாக’ கட்டணம் செலுத்தும் எந்தவொரு கப்பலும், இந்த முக்கியக் கடல் பாதையில் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாதபடி, அமெரிக்க கடற்படையால் முற்றுகையிடப்பட்டு தடுக்கப்படும் என, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
“சரியான நேரத்தில் ஈரானின் ‘கதையை’ முடிப்போம்” என்றார் அவர்.
2-வார போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பாகிஸ்தானில் 21 மணி நேரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கியமாக, ஈரானின் அணு திட்டம் குறித்து இரு தரப்பும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை.
இதனால், துணையதிபர் JD Vance ஏமாற்றத்துடன் திரும்பிய நிலையில், ட்ரம்ப் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கிடையில், ஈரான் இந்த நடவடிக்கையை நிராகரித்து, Hormuz நீரிணையில் தனது கட்டுப்பாட்டைத் தொடரும் என தெரிவித்துள்ளது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாக இருக்கும் இந்த பகுதி பாதிக்கப்படுவதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
எனவே இரு நாடுகளும் பதற்றத்தை குறைத்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்துகின்றன.



