
செப்பாங், அக்டோபர்- 8,
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 2-இல், இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளிடம் சட்டவிரோத கார் வாடகை சேவையை வழங்க முயன்ற ஆடவர் ஒருவரை சாலைப் போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகள் கைது செய்தனர்.
KLIA பகுதியிலான கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒரு ‘டொயோட்டா இனோவா’ (Toyota Innova) காருடன் பிடிபட்டார் என்றும் அந்த வாகனம் முதற்கொண்டு விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டது என்று சிலாங்கூர் JPJ இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் (Azrin Borhan) தெரிவித்தார்.
அந்த நபர் இரண்டு பயணிகளை KLIA டெர்மினல் 2-இல் இருந்து கோலாலம்பூர் வரை அழைத்துச் செல்வதற்கு 100 ரிங்கிட் கட்டணத்தைப் பேரம் பேசியது விசாரணையில் கண்டறியப்பட்டது.
நிலப்பரப்பு பொது போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 50,000 ரிங்கிட் வரையிலான அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், பயணிகள் KLIA டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 2-இல் உள்ள அதிகாரப்பூர்வ போக்குவரத்து கவுண்டர்கள் மற்றும் e-hailing பயன்பாடுகளில் மட்டுமே சேவைகளைப் பதிவு செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.
சட்டவிரோத கார் வாடகை சம்பவங்கள் அல்லது புகார்களை JPJ-க்கு உடனடியாக அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது.