
கோலாலம்பூர், மே-11 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையராக மூன்றாவது முறையாக தான் ஸ்ரீ அசாம் பாக்கியின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது தேவையற்றதாகும்.
இது வரவேற்கக் கூடிய ஒரு முடிவல்ல என, பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் நூருல் இசா அன்வார் கூறியுள்ளார்.
இது போன்ற சேவை நீட்டிப்பால், அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவது கடினமாகிறது.
மாற்றங்களையும் சீர் திருத்தங்களையும் ஏற்படுத்த, அரசு ஊழியர்கள், தலைமை, கட்சித் தொண்டர்கள் என அனைவருக்கும் மனத்திடமும் உறுதியும் வேண்டுமென X தளப் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
தனது தந்தையார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை நூருல் இசா வெளிப்படையாக விமர்சனம் செய்திருப்பது இதுவே முதன் முறையாகும்.
இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு நவம்பரில், அன்வார் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, 2021 பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவை கடைசி நேரத்தில் இரத்துச் செய்ததால் பக்காதான் ஹாராப்பானை நூருல் இசா விமர்சனம் செய்திருந்தார்.
துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை அறிவிக்கும் முன்னர், ஒற்றுமை மற்றும் சீர்த்திருத்தங்களை சமச்சீராக வலியுறுத்தும் வகையில் ஒரு சிறந்த முடிவை எடுப்பேன் என நூருல் இசா குறிப்பிட்டிருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.
ஊழல் துடைத்தொழிப்பில் குறிப்பாக சபா சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட புகாரில் அசாம் பாக்கி மெத்தனமாக செயல்படுவதாக விமர்சனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மே 13 முதல் மேலும் ஓராண்டுக்கு அவரின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.