MYCEC அறிமுகம்: RM5 மில்லியன் ஒதுக்கீடு, ‘திறமை பொருத்தமின்மை’ பிரச்னைக்குத் தீர்வு

கோலாலம்பூர், பிப்ரவரி-23-நாட்டில் ‘திறமை பொருத்தமின்மை’ அதாவது தொழிலாளர்கள் தங்களின் திறமைக்குக் குறைவான வேலைகளில் ஈடுபடும் பிரச்னையைச் சமாளிக்க, MYFutureJobs Career Exploration Centre அல்லது MYCEC அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேலைத் தேடுபவர்களுக்கு உடனடி வழிகாட்டுதல் வழங்கி, வேலை உலகின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை சரியானத் தொழில் பாதைக்கு இட்டுச் செல்வதே இதன் நோக்கமாகும்.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், கோலாலாம்பூர் KL Sentral-லில் இன்று இம்மையத்தைத் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மலேசியாவில் இந்த ‘திறமை பொருத்தமின்மை’ ஒரு கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சுமார் 1.96 மில்லியன் தொழிலாளர்கள் தங்களின் திறமைக்குக் குறைவான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இந்நிலையில், MYCEC, தொழில் பாதைகளை ஆராயும், திறன்களை வளர்க்கும் மற்றும் வேலை வாய்ப்புகளுடன் இணைக்கும் பாலமாக செயல்படும்” என, ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தொடக்கக் கட்டமாக, 6 பல்கலைக்கழகங்களில் முன்னோடித் திட்டமாக இந்த மையம் தொடங்கப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
சமூக பாதுகாப்பு நிறுவனமான PERKESO தலைமையில் செயல்படும் இந்த தொழில் ஆய்வு மையத்திற்காக அரசாங்கம் 5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
MYCEC, திறமைகளை தொழில்துறை தேவைகளுடன் இணைத்து, மலேசியாவின் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்தும் மாற்றத்தின் உந்து சக்தியாக இருக்கும் என ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
PERKESO வாரியத் தலைவர் டத்தோ ஸ்ரீ சுபஹான் கமால் உள்ளிட்டோரும் பங்கேற்ற இன்றைய அறிமுக நிகழ்ச்சியில், PERKESO மற்றும் RHB வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதன் மூலம், 618,000 MySiswa டெபிட் அட்டைதாரர் கள் MYFutureJobs சேவைகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



