
கோலாலம்பூர், பிப்ரவரி 23 – 2023 ஆகஸ்ட் முதல் 2026 ஜனவரி வரை MyJalan செயலி வழியாக மொத்தம் 54,055 சாலை சேதப் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக பணித்துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமாட் மஸ்லான் (Datuk Seri Ahmad Maslan) தெரிவித்துள்ளார்.
அதில் 16,671 புகார்கள் கூட்டரசு சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகள் உள்ளிட்ட பணித்துறை (KKR) பராமரிப்பில் உள்ள சாலைகளைச் சார்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்கள் பிற அமைச்சுகள் அல்லது அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
பணித்துறையின் கீழ் வந்த புகார்களில் 15,160 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன என்றும், மேலும் 1,511 புகார்கள் விசாரணையில் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமைச்சுக்கு உட்படாத சாலைகள் குறித்த புகார்களும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் முகமைகளுக்கு உடனடியாக அனுப்பப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
நகரம், கிராமம், வேளாண்மை, சபா–சரவாக் அல்லது தனியார் சாலை என எந்த வகை புகார்களை பெற்றாலும், அனைத்து புகார்களையும் ஏற்று சம்பந்தப்பட்ட தரப்புக்கு மாற்றப்படுகின்றன.
சாலை சேதங்களைத் தடுக்கும் நோக்கில், கூட்டரசு சாலைகளில் வழக்கமான மற்றும் காலமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் குழி நிரப்புதல், கால்வாய் சுத்தம், சாலை ஓரம் பராமரிப்பு, புல் வெட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு பணிகள் உள்ளடங்கும்.
இந்தப் பணிகள் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி மேற்கொள்ளப்படுகின்றன. காலமுறை பராமரிப்பு பணிகள் ஒதுக்கப்படும் நிதியின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன.



