PN கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி, ‘சட்டவிரோத கோயில்கள்’ பேரணிக்கு பாஸ் ஆதரவு

கோலாலாம்பூர், பிப்ரவரி-5-‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக, வரும் சனிக்கிழமை SOGO பேராங்காடி முன்பு நடைபெறவுள்ள பேரணிக்கு பாஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
“இப்பேரணி, சட்டத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடனேயே நடைபெறுகிறது; எனவே மக்கள் அஞ்சத் தேவையில்லை ” என பாஸ் தகவல் பிரிவுத் தலைவரும் பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான Ahmad Fadhli Shaari கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சிகளான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சியும் கெராக்கானும் இப்பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து அவர் கருத்துரைத்தார்.
MIPP தலைவர் பி.புனிதன், முன்னதாக பாஸ் மற்றும் பெர்சாத்து தலைவர்களுக்கு கடிதம் எழுதி, அவற்றின் உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தினார்.
அதே போல் கெராக்கான் துணைத்தலைவர் ஜி. பரமேஸ்வரன், அமைதிப் பேரணி சட்டம் மத, இன தூண்டுதலுக்காக தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என எச்சரித்தார்.
‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சுயேட்சை மத போதகர் சாம்ரி வினோத் தலைமையில் நூற்றுக்கணக்கான அரசு சார்பற்ற அமைப்புகள் இந்த சனிக்கிழமைப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே ஏராளமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பேரணி தேசிய நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் பாதிக்கக் கூடுமென பரவலாக அச்சம் எழுந்துள்ளது.



