
கோலாலம்பூர், மே-4- MBI International Group Ponzi முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பில், மேலுமொரு ‘தான் ஸ்ரீ’ கைதாகியுள்ளார்.
பினாங்கு சொத்துடைமை நிறுவனமொன்றின் தலைவரான 53 வயது அவ்வாடவர் வியாழக்கிழமை கைதானார்.
விசாரணைக்காக அவர் 5 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இடைக்காலத் தலைவர் டத்தோ முஹமட் ஹஸ்புல்லா கூறினார்.
சந்தேக நபரின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
மோசடி கும்பலின் பினாமியாக செயல்பட்டு, கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் வேலையில் அவர் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
விசாரணைகள் தொடருவதாகக் கூறிய டத்தோ ஹஸ்புல்லா, மேலும் பலர் கைதாகும் சாத்தியத்தை மறுக்கவில்லை.
இவ்விசாரணை குறித்த மேல் விவரங்கள் விரைவிலேயே ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படுமென்றார் அவர்.
Ponzi முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பில் ‘தான் ஸ்ரீ’ பட்டத்தைக் கொண்ட ஒரு தொழில் அதிபர், ‘டத்தோ ஸ்ரீ’ பட்டத்தை கொண்ட வர்த்தகர் உள்ளிட்ட ஐவர் ஏற்கனவே கைதானது குறிப்பிடத்தக்கது.
அவ்விசாரணையின் ஒரு பகுதியாக, 123.61 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 299 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன;
இது தவிர, 223.62 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டுரியான் தோட்டங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன.