
கோலாலம்பூர், பிப்ரவரி-5-அரசாங்கம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே PTPTN கடனுதவியில் முன்னுரிமை வழங்கி வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
கல்விக் கடன் சுமை தற்போது 10 பில்லியன் ரிங்கிட் அளவிற்கு உயர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
தனியார் பல்கலைக்கழகங்களில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கும் PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதில் விலக்கு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அன்வார், அது தற்போது பரிசீலனையில் இருப்பதாகக் கூறினார்.
இருப்பினும், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை பாதிக்கும் அவசர பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“கல்வி வாய்ப்புகளை, எவ்வளவு மலிவாகக் கொடுக்க முடியுமோ அவ்வளவு மலிவாகக் கொடுக்க வேண்டும்; முடிந்தால், உதவித் தேவைப்படும் அனைவரும் உரிய வசதிகளை நாம் செய்துத் தர வேண்டும்”
ஆனால் கல்விக் கடன் சுமையையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக, ஸ்தாப்பாக்கில் உள்ள TAR UMT பல்கலைக்கழகத்தில் “Temu Anwar” கலந்துரையாடலில் பங்கேற்ற போது அன்வார் சொன்னார்.
தனியார் பல்கலைக்கழகங்களில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கும் PTPTN கடன் விலக்கு வழங்கும் சாத்தியத்தை பரிசீலிப்பதாக, கடந்த டிசம்பரில், உயர் கல்வி அமைச்சு கூறியிருந்தது.
ஆனால், 2026 பட்ஜெட்டில், இந்த விலக்கு அரசாங்க பல்கலைக்கழகங்களில் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற, குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே தொடர்ந்தும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



