
கோலாலம்பூர், மார்ச் 18-கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில், போலி
பிராண்டட் கைக்கடிகாரங்களைச் சேமித்து வைத்து விற்பனை செய்வதில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு வளாகத்தில், உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கையில் ஆடவர் ஒருவரை கைது செய்ததோடு 790,600 ரிங்கிட் மதிப்புள்ள, பல்வேறு பிரபலமான பிராண்டுகளின் 790 கைக்கடிகாரங்களைப் பறிமுதல் செய்தது.
இந்த நடவடிக்கையின்போது இதர பல்வேறு பொலி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் அமலாக்கப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் ( Azman Adam ) தெரிவித்தார்.
சுமார் ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அந்த வளாகத்தின் மேலாளராகவும் இருக்கும் உள்நாட்டைச் சேர்ந்த ஒரு நபரால் இந்த வளாகம் நடத்தப்பட்டு வந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தாக அஸ்மான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
30 வயதுடைய அந்த சந்தேக நபர், வளாகத்தின் மேலாண்மை, பொருட்களின் கையிருப்பு மற்றும் விற்பனை நடவடிக்கைகள் உள்ளிட்ட முழு செயல்பாட்டிற்கும் பொறுப்பானவர் என்று நம்பப்படுகிறது.



