
கோலாலாம்பூர், மார்ச்-26-மானிய விலையிலான RON95 பெட்ரோலை வாங்க மற்றும் விற்க விதிக்கப்படும் தடை, இனி வெளிநாட்டில் பதிவுச் செய்யப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.
இதற்கு முன் இந்தத் தடை பெட்ரோல் நிலைய நடத்துநர்களுக்கு மட்டுமே பொருந்தியது.
இப்போது, ஏப்ரல் 1 முதல், வெளிநாட்டு வாகனங்கள் RON95 பெட்ரோல் வாங்கினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என KPDN எனப்படும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கூறியது.
1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், முதல் தவறுக்கு அதிகபட்சமாக RM1 மில்லியன் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என, அமைச்சர் டத்தோ அர்மிசான் அலி தெரிவித்தார்.
இம்முடிவு, எல்லைப் பகுதிகளில் எரிபொருள் கடத்தலை தடுக்கும் OPS Tiris 4.0 நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
எரிபொருள் மானியக் கசிவைத் தடுக்கும் KITA GEMPUR திட்டத்தின் கீழ், எவ்வித சமரசமும் செய்யமாட்டோம் எனவும் அர்மிசான் திட்டவட்டமாகக் கூறினார்.



