
கோலாலம்பூர், மார்ச்-30-நாட்டில் RON95 பெட்ரோல் வாங்கும் போது, வெளிநாட்டு வங்கி (debit) அல்லது கடன் பற்று அட்டை (credit) பயன்படுத்துவதில் புதியக் கட்டுப்பாடு வரும் புதன்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.
இனி வெளிநாட்டு கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளை பெட்ரோல் நிலையங்களில் உள்ள சுயசேவை இயந்திரங்களில் பயன்படுத்த முடியாது.
மாறாக, பெட்ரோல் நிலையங்களின் கட்டண முகப்புகளில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
இந்நடவடிக்கை, எரிபொருள் மானியங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும் எடுக்கப்படுவதாக, KPDN எனப்படும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கூறியது.
இந்த புதிய முறையை அமல்படுத்த பல பெட்ரோல் நிலையங்கள் தயாராகி விட்டன; மேலும் பல நிலையங்கள் கட்டங்கட்டமாக இதனை அமல்படுத்தும் என KPDN கூறிற்று.
வெளிநாடுகளில் பதிவுச் செய்யப்பட்ட வாகனங்கள் RON95 பெட்ரோலை வாங்க விதிக்கப்படும் முழுத் தடையும் அதே புதன்கிழமை அமுலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது
இந்த மாற்றம் மூலம், மானியங்கள் உண்மையில் தகுதியான மலேசியர்களுக்கே சென்றடையும் என KPDN நம்புகிறது.



