Latestமலேசியா

ROS, அரசின் முடிவுக்கு எதிரான சீராய்வு மனுவுக்கு உரிமை கட்சிக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி

புத்ரா ஜெயா, பிப் 27 – கட்சியின் பதிவு விண்ணப்பத்தை கடந்த ஆண்டு நிராகரித்த அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு உரிமை கட்சியின் தலைவரும் பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமிக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு உரிமை கட்சி செய்திருந்த வழக்கு மனுவுக்கு சட்டத்துறை தலைவர் அலுவலகத்தை பிரநிதித்து ஆஜரான கூட்டரசு முதிர்நிலை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென வழக்கறிஞர் சம்செர் சிங் தின்ட் ( Shamsher Singh Thind ) தெரிவித்தார்.

உரிமை கட்சியின் பதிவை நிராகரித்தற்கான காரணம் குறித்து சங்கங்களின் பதிவகமான ROS தனது நியாயத்தை தெரிவிக்க வேண்டும் என்பதோடு உடனடி முறையீட்டிற்கு ஏன் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் அவர் கூறினார்.

இந்த வழக்கின் மறு செவிமடுக்கும் தேதியை மார்ச் 24ஆம் தேதிக்கு நீதித்துறை ஆணையர் ஹயத்துல் அக்மால் அப்துல் அஸிஸ் நிர்ணயித்தார்.

டாக்டர் பி. ராமசாமி தலைமையிலான உரிமைக் கட்சியின் பதிவை நிராகரித்த சங்கங்களின் பதிவிலாகாவின் முடிவு அரசியலமைப்புச் சட்ட உரிமையை மீறுவதாக இருப்பதோடு கட்சியின் பதிவை நிராகரித்தது மற்றும் அது தொடர்பான முறையீட்டை உள்துறை அமைச்சர் பரிசீலிக்க தவறியது கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 10 (1 ) ( c) யில் தெரிவிக்கப்பட்டுள்ள உரிமைகளை மறுப்பதாக இருக்கிறது.

எனவே நீதிமன்றத்தின் உத்தரவை உரிமை கட்சி கோரியுள்ளது. மேலும் சங்கங்களின் பதிவு அதிகாரியின் முடிவை ரத்து செய்வதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்பதோடு 14 நாட்களுக்குள் உரிமையை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கட்டாயப்படுத்துவதற்காக ஆணையை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமென உரிமை கட்சி கோரியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!