
சுங்கை பட்டாணி – மே 29 – சுங்கை பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவிலுள்ள வீடொன்றில், சட்ட விரோதமாக வளர்க்கப்பட்டு வந்த 150,000 ரிங்கிட் மதிப்பிலான 12 ‘முராய் பாத்து’ (Murai Batu) இன பறவைகள், மலேசிய தீபகற்ப வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN-னால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த அதிரடி நடவடிக்கை, காவல் துறையினர் மற்றும் சுங்கை பட்டாணி ஊராட்சி மன்றத்துடன் இணைந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதென்று மலேசிய தீபகற்ப வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (PERHILITAN) இயக்குநர் ஜெனரல் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் (Datuk Abdul Kadir Abu Hashim) தெரிவித்தார்.
அண்டை வீட்டார் அளித்த புகாரைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கைதான 20 வயது ஆடவன், முறையான கழிவு மேலாண்மையையும் கையாளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதே போன்ற சம்பவம் அண்மையில் கெடா கூலிமில் நிகழ்ந்து, அதில் 102,000 ரிங்கிட் மதிப்பிலான பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 50 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.