
ஜோகூர் பாரு, அக்டோபர்-7 – ஜோகூரில் வார இறுதி விடுமுறை நாட்கள் மீண்டும் சனி-ஞாயிற்றுக் கிழமைகளுக்கே மாறுகின்றன.
அடுத்தாண்டு ஜனவரி முதல் அது அமுலுக்கு வருவதாக, ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
ஜோகூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் கருத்துகளைப் பெற்ற பிறகு, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஒப்புதலுடன், 2025 ஜனவரி முதல் தேதி அம்மாற்றம் நடப்புக்கு வருவதாக TMJ சொன்னார்.
இம்மாற்றத்தை அடுத்து, அடுத்தாண்டு முதல் ஜோகூர் முஸ்லீம்கள் தங்களின் வெள்ளிக் கிழமைத் தொழுகைகளைச் சுமூகமாக மேற்கொள்ள, அரசுத் துறையினர், தனியார் நிறுவனங்கள் ஆகியவை போதுமான நேரத்தை வழங்க வேண்டுமென்றும் துங்கு இஸ்மாயில் அறிவுறுத்தினார்.
ஜோகூரில் 2014-ஆம் ஆண்டு முதல் வார இறுதி விடுமுறை நாட்களாக வெள்ளி-சனிக்கிழமைகள் அனுசரிக்கப்பட்டு வருகின்றன.