கோலாலம்பூர், ஜன 2 – பிரிக்பில்ட்ஸ் வட்டாரத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்களுக்க எதிரான நேற்று பிற்பகலில் மேற்கொண்ட நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
குடிநுழைவுத்துறை தலைமையிலான இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு அரசாங்க நிறுவனங்களை சேர்ந்த 224 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் ஜாலான் தம்பி அப்துல்லாவில் 30 இடங்களில் சோதனை நடத்தினர். பிற்பகல் ஒரு மணியளவில் தொடங்கிய அந்த நடவடிக்கையின்போது 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் துணை தலைமை இயக்குனர் ஜாஃப்ரி எம்போக் கூறினார்.
370-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகளிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் 174 இந்திய பிரஜைகள், 36 பாகிஸ்தானியர்கள் ,இலங்கையை சேர்ந்த 21 பேர் மற்றும் 30 இந்தோனேசியர்களும் அடங்குவர் என அவர் தெரிவித்தார்.
குடிநுழைவுத்துறையின் தலைமையகத்தில் அவர்களது ஆவணங்களில் பரிசோதனை நடத்தப்பட்ட பின் கைது செய்யப்பட்டவர்களின் முழுமையான விவரங்கள் அறிவிக்கப்படும் என ஜாஃப்ரி எம்போக் தெரிவித்தார்.