கோலாலம்பூர், நவ 3 – I -Serve நிறுவனத்தில் முதலீடு செய்த 67 பேர் 81 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான தொகையை இழந்தனர். மைஏர்லைன் நிறுவனத்தின் இணை தோற்றுவிப்பாளரான கோ ஹ்வான் குவாவுடன் தொடர்புப்படுத்தப்படும் மின் வர்த்தக நிறுவனமான i-Serve Online Mall Sdn Bhd-ட்டில் முதலீடு செய்தவர்களிடமிருந்து 67 புகார்களை போலீசார் பெற்றுள்ளனர். மொத்தம் 81.69 மில்லியன் ரிங்கிட் இழப்பு சம்பந்தப்பட்டதை அந்த புகார் கொண்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணைத் துறை இயக்குனர் ரம்லி யூசுப் தெரிவித்தார்.
ஏமாற்றியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420ஆவது விதியின் கீழ் இது குறித்து நாங்கள் விசாரணையை தொடங்கியிருக்கிறோம் என்றும் ரம்லி யூசுப் கூறினார். பணத்தை இழந்தவர்கள் உடனடியாக போலீசில் புகார் செய்யும்படி இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே கோ ஹ்வான் குவா மற்றும் மூத்த வழக்கறிஞர் உட்பட எட்டு நபர்களை விசாரணைக்காக போலீசார் கைது செய்தனர்.