பாரிஸ், டிச 29 – அல்ஜீரியாவில் இருந்து பாரிஸ் நகருக்கு வந்த வர்த்தக விமானத்தின், தரையிறங்கும் டயரின் கியர் பகுதியில், ஆடவன் ஒருவன் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அல்ஜீரியாவின் ஓரானில் இருந்து ஏர் அல்ஜீரி விமானம் நேற்று வியாழக்கிழமை பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதனையடுத்து வந்திறங்கிய விமானத்தை தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தியபோது, விமானத்தின் டயர் பகுதியில் ஒருவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உயிருடன் மீட்கப்பட்ட அந்த நபருக்கு 20 வயது இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், அவரிடம் எந்தவித அடையாள ஆவணமும் இல்லை.
பொதுவாகவே, 9,000 முதல் 12,000 மீட்டர் உயரத்தில் விமானம் பயணம் செய்யும் போது வெப்பநிலை உறை நிலைக்கும் கீழ் 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இதனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு டயரின் கியர் பகுதியில் பயணிக்கும் எவராலும் உயிரோடு இருப்பது சாத்தியமில்லாத ஒன்று. இருப்பினும், இவ்வாடவன் உயிர் ஊசலாடும் நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.
இதனிடையே, 1947 முதல் 2021 வரை 132 பேர் வணிக விமானங்களின் தரையிறங்கும் டயரின் கியர் பகுதியில் பயணிக்க முயன்றுள்ளதாக வான் போக்குவரத்து நிர்வாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.