முடி திருத்துதல் என்றாலே இரு பாலருக்கும் மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. அதிலும் சலூன்களில் விதவிதமாக முடிகளை வெட்டி, திரவியங்களை பயன்படுத்தி style செய்து கொண்டு வர்ணங்களை அடித்து சிகை அலங்காரம் செய்து கொள்வது என்றாலே பலருக்கு அலாதி பிரியமே.
இந்நிலையில், வணிக மயமான இன்றைய நடைமுறையில் முடி வெட்டுதலை ஒரு தொழிலாக கையாண்டு ஆண்களும் பெண்களும் கடைகளை நடத்தி வருகின்றனர். முடி வெட்டுவது மட்டுமல்லாது அதனை பாரமரிக்கும் முறை, முகத்திற்கு ஏற்ற முடி வெட்டும் விதம், முடியின் தன்மையை மாற்றும் முறைகள் என பலவகையான திறன்களை கற்று இத்தொழிலை செய்கின்றனர்.
இதனிடையே இன்னும் பலர் இத்தொழிலைக் கற்று கூடுதல் சுயவருமானத்தை ஈட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கண்ணா சிகை அலங்கார அகாடாமி மித்ரா,மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவின் முழு ஆதரவோடு முடி திருத்தும் பயிற்சியினை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
அதன் வழி இப்பயிற்சியில் கலந்து வெற்றிகரமாக முடித்த 30 மாணவர்களுக்கு நேற்று சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்த பயிற்சி மித்ரா நிதியின் வாயிலாக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
25 நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த சிகையலங்கார பயிற்சி கண்டிப்பாக பங்கேற்பாளர்களின் திறனை வெளிப்படுத்த உதவியதோடு, இதன் பிறகு அவர்கள் internship எனப்படும் வேலையிட பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறார்கள் என கண்ணா சிகை அலங்கார அகாடாமி நிர்வாக இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.
தங்களுக்கு தெரிந்த கலையினை இந்த இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதாக கூறுகிறார் பயிற்றுனரான சரவணன்.
சிகை அலங்காரம் சார்ந்த திறன்களை கற்க வேண்டும் என்ற எண்ணம் இந்த பயிற்சியின் வழி கிடைத்தாக இந்த பயிற்சியில் பங்கேற்று பட்டம் பெற்றவர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
முடி திருத்தும் தொழில் துறையில் அந்நியர்களை நம்பியிருக்காமல் உள்ளூரில் தொழிலாளர்களை உருவாக்க வேண்டும். இருப்பினும், தற்போது நாட்டில் போதிய திறன்பெற்ற இளைஞர்கள் இல்லாத நிலையில் அரசாங்கம் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வழிவிட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது.