சென்னை, பிப் 28 – ஏர் ஏசியா தற்போது இந்தியாவில் 14 நகர்களுக்குத் தனது சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் 2 நகர்கள் அதிகம் என மொத்தம் 16 நகர்களுக்குத் தனது சேவையை ஏர் ஏசிய அதிகரிக்க இருப்பதாக ஏர் ஏசியா குழும நிறுவனத்தின் விமான நிலைய கட்டுப்பாடு மற்றும் பயணிகள் அனுபவ அதிகாரி கேசவன் சிவானந்தம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த சேவை, எதிர்காலத்தில் 20 நகர்களுக்குப் அதிகரிக்கும் எண்ணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மலேசியா-இந்தியாவிற்கிடையே தனது விமானச் சேவையின் மூலம் ஏர் ஏசியா பெரும் சாதனை படைத்துள்ளதாக இந்தியாவிற்கான மலேசியத் தலைமை தூதரக அதிகாரி கே. சரவண குமார் தெரிவித்தார்.
ஏர் ஏசியா வழங்கி வரும் மலிவான கட்டணத்தின் மூலம் லட்சக்கணக்கான இந்தியச் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருவதை காணமுடிவதாக கூறிய அவர், அதுமட்டுமில்லாமல் இலவச விசா நடைமுறை வசதியும் சுற்றுப்பயணிகளை அதிகம் கவர்ந்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நேற்று இந்தியாவில் நடைபெற்ற ஏர் ஏசியா செய்தியாளர் சந்திப்பில் தென்னிந்தியா மலேசியச் சுற்றுலாத்துறை அதிகாரியான Ruzaidi Abd Rahim, தற்போது மலேசியாவில் ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சி கண்டு உள்ளதை குறிப்பிட்டார். இந்த வீழ்ச்சியினால் நாட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே ஏர் ஏசியா விரிவாக்கத்தைக் கொண்டாடும் வகையில், கோலாலம்பூரில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் RM 249 ரிங்கிட் கட்டணத்தை ஒரு வழிக்கு சிறப்பு சலுகையாக அறிவித்துள்ளது. 27 பிப்ரவரி முதல் 10 மார்ச் வரை இந்த சலுகைக்குப் பதிவு செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.