
வாஷிங்டன், ஜூன்-26 – கடந்த வார இறுதியில் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் நடத்தியத் தாக்குதல்கள், அந்நாட்டின் அணு சக்தித் திட்டத்தின் முக்கிய கூறுகளை அழிக்கவில்லையாம்.
மாறாக, ஈரானுக்கு சில மாதங்கள் வரையிலான பின்னடைவை மட்டுமே அவை ஏற்படுத்தியிருக்கலாம் என, அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
போர் சேதம் மீதான அமெரிக்க உளவுத்துறையின் தொடக்கக் கட்ட மதிப்பீட்டில் அவ்விஷயம் தெரிவிக்கப்பட்டதாம்.
இந்த மதிப்பீடு, அமெரிக்கத் தற்காப்பு அமைச்சான பென்டகனின் உளவுத்துறைப் பிரிவால் தயாரிக்கப்பட்டுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது.
மதிப்பீட்டை நன்கு அறிந்தவர்களில் இருவர், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பு அழிக்கப்படவில்லை என்று கூறினர்; மையவிலக்கு கருவிகள் பெரும்பாலும் “அப்படியே உள்ளன” என்று ஒருவர் சொன்னார். மற்றொரு வட்டாரமோ, அமெரிக்கத் தாக்குதல்களுக்கு முன்னரே, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் முன்னேற்பாடாக வெளியே கொண்டு சென்று விட்டதாகக் கூறியது.
ஆனால் இந்த தொடக்கக் கட்ட மதிப்பீடுகள், “ஈரானின் அணு சக்தி செறிவூட்டல் நிலையங்களை முற்றிலுமாக அழித்துவிட்டோம்” என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் திரும்ப திரும்ப வெளியிட்ட கூற்றுகளுடன் முரண்படுகின்றன.
போதாக்குறைக்கு அமெரிக்க தற்காப்பு அமைச்சரும், ஈரானின் அணுசக்தி கனவுகள் தகர்க்கப்பட்டு விட்டன என கூறியிருந்தார்.
இப்படி ஒரு மதிப்பீடு இருப்பதை வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டாலும், அதன் உள்ளக்கடத்தை ஏற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அணு சக்தி நிலையங்களை அழித்து விட்டோம் என ஊரறிய டிரம்ப் முழங்கி விட்டதால், இப்போது அது நடக்கவில்லை என தெரிந்தால் அவமானமாகி விடுமே என்ற கலக்கமே அதற்குக் காரணமாம்.